Image by LuAnn Hunt from Pixabay
உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள்.
செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம்.
ஏன் இந்த வேறுபாடு?
முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர்.
அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர்.
ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான்.
பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார்.
அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான்.
இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்து கொண்டிருக்கிறார் என்றும் விலா வாரியாக எடுத்து கூறினான்.
பணக்காரன் குறைபட்டுக் கொண்டவனை பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிக சம்பளம் பெரும் காரணம் என்றார் சிரித்தபடி.
சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும் தான், ஆனால் அதற்கும் மேல் அதிகப் படி சிந்தித்து அழகாக செய்வது என்பது, திறமையான வேலை.
ஊரில் எத்தனையோ மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லாரும் போய் மொய்த்துக் கொள்கிறார்களே, ஏன்?
ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.
திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழி விட்டு நிற்கிறது.
வெட்டி வா என்றால் கட்டிக் கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோடையே போடுபவர்கள், என்று இப்படிப்பட்டவர்களுக்கு தான் என்றும் எங்கும், மவுசும் மரியாதையும் இருக்கும்.
வெறும் இச்சை மற்றும் இருந்தாலே அது திறமை ஆகி விடாது. மூச்சடக்கிக் காட்டினால் தான் 'முனி' என்று ஏற்று கொள்வார்கள்.
திறமைசாலி ஒரு போதும் பொருட்களை வீணாக்க மாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.
மனதை அலைபாய விடாமல், செய்யும் செயல்களில் ஒரு நிலைப்படுத்தி, தன்னை கட்டுப்படுத்தி, புறச் சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர் பார்த்த முடிவுகளை தரக் கூடியவன் தான் திறமைசாலி.
வெறுமே 'மாங்கு மாங்கென்று', செக்கு மாடு போல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
அதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறைமையாகி விடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப் பிடிப்பது தான் திறமையாகும்.
கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.
இருக்கும் திறமையை சரிவர பயன்படுத்தாமல், "குடத்தில் இட்ட விளக்காக" இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப் பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.
சோதனைக் களங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள்.
எதிலும் முழுமையை எதிர் பார்ப்பது, எதையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக் கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது.
திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும் , நம்மால் நிச்சயம் அடைய முடியும்.
நேரத்தை முறையாக திட்டமிட்டு, பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.
ஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள் தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத் துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்த துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்?
எனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் பட வேண்டும். பொருத்தமான செயல் முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் வேண்டும்.
மேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப் படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்!
- ச.வெங்கடேஷ்
கருத்துகள்
கருத்துரையிடுக