முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர் வீதி


 Image by Mahinthan So - சொந்த முயற்சி


வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள்.

அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே. 

"கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்."

"அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி.

"அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி.

திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. முருகன் தேர், பின்னால் குட்டி கணபதி தேர் என வரிசையாக அலங்காரமாய் வண்ணமயமாக புறப்படும் நிலையில் தேர்கள் தயாராக இருந்தன.

தெருவெல்லாம் திடீர் கடைகள் முளைத்திருந்தன. பாத்திரக்கடை முதல் பேன்சி சவுரிக் கடைகள் வரை நடக்கக் கூட இடமின்றி அந்த பிரதேசமே முழுக்க வியாபித்து இருந்தன. பாம்பு உடல் பெண், மாஜிக் ஷோ, கரடி வித்தை, கம்ப்யூட்டர் ஜோசியம், ரிங் விளையாட்டு என அனைத்து திருவிழா அம்சங்களுக்கும் குறைவில்லை. வர்ண பலூன்களும், விசிறிகளும் கண்களைக் கவர்ந்தன.

நாதஸ்வரம் தவில் ஓசையுடன் கோவில் வழிபாடு ஒரு புறம் நடக்க, வெடிகள் அதிரடியாய் வானில் வெடித்துச் சிதறி வண்ண பூக்களை வாரியிரைத்தன.

ஜெண்டையும், பம்பையும் முழங்க மக்கள் கூட்டம் தேரினை இழுக்க முண்டியடித்து வரிசை பிடித்து 'ஹரஹர சிவ சிவ' என்று விண்ணதிர முழக்கமிட்டு ஆர்ப்பரித்து நின்றார்கள்.

முப்பது வருடங்களாக தேர்க் கட்டை போடும் கலையில் தேர்ந்தவனான சுப்புணி கடமையில் மும்மரமாக இருந்தான்.

கடகடவென தேர் ஓடத்தொடங்கியது. 'ஹோ ஹோ 'வென மக்களின் ஆரவாரம்.

'சிவ சிவா' வென்று விண்ணதிரே  முழக்கம். பரபரப்பு கூடிக்கொன்டே வந்தது.

சுப்புணி மகளை நினைத்து கொண்டான். பாவம் தாயில்லா பெண். துணைக்குக் கூட ஆளின்றி தனியாக ஆஸ்பத்திரியில் இருக்கா. எப்ப ஆகுமோ? எப்படி ஆகுமோ? ஆண்டவனே நீயே கதி.

படபடவென பட்டாசு ஒலி அதிர வைத்தது, ஜெண்டை மேளமும் , கொம்புகள் எக்காள ஒலியும்  உச்சகட்டத்தை எட்டின. திடிரென்று தேர் சக்கரம் பள்ளத்தில் புரண்டு நிலை தடுமாறியது. சுப்புணி திடுக்கிட்டான். கட்டை போட்டும் எதுவும் எடுபடவில்லை. வேகம் தணியவில்லை. தேர் ஒருபுறம் சாயத் தொடங்கியது.

கணநேரத்தில் சுப்புணி தேர்முன் பாய்ந்தான். 'சதக்' என்ற ஒலி . நசநசப்புடன் தேர் சுதாரித்தபடி சரியானது. தேர் நின்றது.

அரசு ஆஸ்பத்திரியின் அமைதியை கிழித்தபடி அப்பொழுதுதான் ஜனித்த ஆண் குழந்தையின் 'குவா குவா' சத்தம் காற்றில் மிதந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

திறமை தான் நமக்கு செல்வம்

  Image by  LuAnn Hunt  from  Pixabay உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள். செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு? முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர். ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான். பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான். இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று க...