முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணம்

 


Image by analogicus from Pixabay


"கஞ்ச பாளையம் ரயில் கேட் கிட்ட பொணம் ஒன்னு கிடக்காம் ."

யாரு?

"தெரியலே. வயசான பெருசாம் ."

முத்துவுக்கு வயிற்றில் ஐஸ்கத்தி செருகினாப் போல். காரமாய் அமிலம் சுரந்தது. உடனே கழிப்பறைக்குப் போக வேண்டும் போல் சங்கடம்.

அரக்கு சிவப்பாய் உறைந்தோடிய இரத்தம். நசுங்கிய தலை. விழிகள் நிலைகுத்தியபடி 'இப்ப என்னடா செய்வ' என்று கேட்டது. சிதறிய முண்டம் முட் செடியில்  சுருணை போல் தொங்கிக் கிடந்தது.

கற்பனை அவனை மிகவும் இம்சித்தது. கடவுளே! அவராக இருக்க கூடாது. "முருகா முருகா". உதடுகள் நடுங்கின. தனது மொபட்டை உதைத்து முறுக்கினான்.

காலையில் பல் துலக்கும் போதே அப்பாவின் செருப்பு இருக்குமிடம் வெறுமையாக கிடந்ததை கவனித்தான். வாக்கிங் போயிருப்பாரோ? திரும்பும் போது மாரி முத்து டீ கடையில் புகைத்தபடி தினத்தந்தி படித்து விட்டு ஏழரைக்கெல்லாம் வந்துடுவாரே. என்ன ஆச்சு ?

"அப்பா எங்கே? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா ?"

"நானென்ன கண்டேன் , நேத்திலிருந்து கோவமாத் தான் இருக்காரு, சரியா சோறு தின்னறதில்ல. என்ன எழவோ."

சிவகாமிக்கு விவரம் பத்தாது. படிப்பும் கம்மிதா. சின்ன மருமக வந்ததிலிருந்து இவ டம்மியாயிட்டா. மூட்டை துணி, மோழிப் பாத்திரம், சமைப்பது, பெருக்குவது என்று எல்லாம் அவள் தலையில் விழுந்தது.

நேற்று பெரியவர் டீ  தண்ணிக்கு ஆலாய் பறந்திருக்கார். சிவகாமிக்கு என்ன கடுப்போ. "போய்யா, சின்னவள டீ வச்சு கொடுக்க சொல்லு. சும்மா நொய் நொய்ன்னு மனுசி உயிரை வாங்கற" என்று பொங்கி விட்டாள்.

கோவிச்சுட்டு வயசான காலத்துல எங்க தான் போனாரு? ஒரு வேளை..அவனுக்கு 'குப்' என்று வியர்த்தது. நெஞ்சு படபடத்தது. அது அவரா இருக்கக் கூடாது. பழனி முருகா நீ தான் காப்பாத்தனம். உனக்கு காவடி எடுக்கிறேன்.

வழியில் சிறுவன் வண்டியை மறிச்சான். "அண்ணா இந்த பக்கம் வண்டி போகாது. போலீஸ்காரங்க தண்டவாளம் பக்கம் நிக்கறாங்க. எவனோ பிச்சைக்காரன் அடிபட்டு கிடக்கான்" என்றான்.

முத்துவுக்கு முதுகுத் தண்டு சிலிர்த்தது. அப்பா என்ன ஆனார்? அடுத்த விசாரம் அவனை தொத்தியது. போலீசுக்குப் போவதா? எங்கே போய் தேடுவது? பாழாப் போன பெருசு இப்படி செஞ்சுட்டதே. உடல் தளர்ந்து வாய் உலர்ந்து போனது. காற்றில் மிதப்பது போல் இயந்திரமாய் வீடு வந்ததே தெரியவில்லை.

வீட்டின் முன்னே அப்பாவின் செருப்பு அவனை வரவேற்றது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

தேர் வீதி

  Image by  Mahinthan So - சொந்த முயற்சி வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள். அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே.  "கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்." "அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி. "அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி. திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் ...

திறமை தான் நமக்கு செல்வம்

  Image by  LuAnn Hunt  from  Pixabay உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள். செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு? முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர். ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான். பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான். இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று க...