முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பா

 


ஒரு பெருமழையின் கடைசித்துளியை

மண் உறிஞ்சிக் கொண்டதுபோல்

உன் இறுதித் தருணங்கள்

பிரபஞ்சத்தில் கரைந்திருக்கக் கூடும்

 

ஒரு நூற்றாண்டின் சோர்வை

அந்நாட்களில் கரைத்திருப்பாய்


பெருவலியின் அடர்த்தியைக் கடத்திய

கண்களின் கூர்மை

என் எஞ்சிய வருடங்களைத்

துளையிட்டுச் செல்கிறது


நாம் சேமித்துக்கொண்ட

பேசப்படாத சொற்களைக் கொண்டு

துன்பம் தோயும்

ஒரு கவிதையை எழுத முயல்கிறேன்


ஓயாத அலைகளாய்

துரத்தும் உன் நினைவுகளில்

நனையாவண்ணம் நிற்கிறேன் எனினும்,

பாதத்தில் கரைந்தோடுகிறது மணல்


நீண்ட இடைவெளிக்குப்பின் நாம்

கைகோர்த்துக்கொண்டதும்; நீ

என் மடி சாய்ந்து கொண்டதும்

தீ கொண்ட உன் நினைவடுக்கில்

புதைந்திருக்கிறதா இன்னும்?


நம் சந்திப்பு

எப்பொழுதேனும் நிகழக்கூடும்

மீண்டுமொருமுறை;

அம்முறையேனும் நீண்டதொரு காலம்

கூடியிருப்போம் அப்பா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....

பயணம்

  Image by  analogicus  from  Pixabay "கஞ்ச பாளையம் ரயில் கேட் கிட்ட பொணம் ஒன்னு கிடக்காம் ." யாரு? "தெரியலே. வயசான பெருசாம் ." முத்துவுக்கு வயிற்றில் ஐஸ்கத்தி செருகினாப் போல். காரமாய் அமிலம் சுரந்தது. உடனே கழிப்பறைக்குப் போக வேண்டும் போல் சங்கடம். அரக்கு சிவப்பாய் உறைந்தோடிய இரத்தம். நசுங்கிய தலை. விழிகள் நிலைகுத்தியபடி 'இப்ப என்னடா செய்வ' என்று கேட்டது. சிதறிய முண்டம் முட் செடியில்  சுருணை போல் தொங்கிக் கிடந்தது. கற்பனை அவனை மிகவும் இம்சித்தது. கடவுளே! அவராக இருக்க கூடாது. "முருகா முருகா". உதடுகள் நடுங்கின. தனது மொபட்டை உதைத்து முறுக்கினான். காலையில் பல் துலக்கும் போதே அப்பாவின் செருப்பு இருக்குமிடம் வெறுமையாக கிடந்ததை கவனித்தான். வாக்கிங் போயிருப்பாரோ? திரும்பும் போது மாரி முத்து டீ கடையில் புகைத்தபடி தினத்தந்தி படித்து விட்டு ஏழரைக்கெல்லாம் வந்துடுவாரே. என்ன ஆச்சு ? "அப்பா எங்கே? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா ?" "நானென்ன கண்டேன் , நேத்திலிருந்து கோவமாத் தான் இருக்காரு, சரியா சோறு தின்னறதில்ல. என்ன எழவோ." சிவகாமிக்கு விவரம் பத...